உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 24, 2020

சிலிர்க்க வைத்த மகா சக்தி!

தொடர்ச்சி... சாவியில் நடந்த அந்த விபரீதம்! - III சாவி தூக்கம் கலைந்து எழுந்து வந்தார். “என்னா பாலு, இவ்ளோ காலங்கார்த்தால வந்திருக்கே? என்னா விஷயம்?” என்றார். “சார், அது வந்து... ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு! ஃபாரம் முடிச்ச கவரை ரவி கொண்டு போனான் இல்லையா... வழியில எங்கேயோ தவற விட்டுட்டான்...” “என்ன சொல்றே... கவரு... தொலைச்சுட்டானா? புரியும்படியா சொல்லு!” என்றார் சாவி. “ஆமாம் சார்... சைக்கிள் கேரியர்ல ஃபாரம் முடிச்ச கவரை வெச்சுக்கிட்டு, அவனே நடராஜா கிராஃபிக்ஸ்ல கொடுத்துடலாம்னு கொண்டு போயிருக்கான். அப்போ, எங்கேயோ வழியில தவறி விழுந்துடுச்சாம். தேடிப் பார்த்துக் கிடைக்கலைன்னு...” - ஜே.பி. மேலே சொல்லத் தொடங்குவதற்குள், வாட்ச்மேன் சித்திரை அவசரமாகப் படியேறி மேலே வந்தார். “அய்யா! இல்லீங்கய்யா! கவர் இங்கேயேதான் ரவி சார் டேபிள் மேல இருக்குது” என்று அந்தக் கவரை சாவி சார் கையில் தந்தார் சித்திரை. அதை சோபாவில் அமர்ந்து நிதானமாகப் பிரித்துப் பார்த்த சாவி, எல்லாம் சரியாக இருப்பதை அறிந்து, அதை ஜே.பி-யிடம் கொடுத்து, “இதைக் கொண்டு போய் நீயே நடராஜா கிராஃபிக்ஸில் கொடுத்துட்டுப் போயிடு! ரவி பாவம், நேத்திக்கும் கண் முழிச்சிருக்கான். முந்தாநாளும் கண் முழிச்சிருக்கான். அந்தத் தூக்கக் கலக்கத்துல, கவரை எடுத்துக்கிட்டுப் போனதா தப்பா நினைச்சுக்கிட்டு தொலைச்சுட்டோமோன்னு பயந்து, உன்னை அனுப்பியிருக்கான். அவன்கிட்டே போய் உடனே, ‘கவரை நீ எடுத்துக்கிட்டுப் போகலை; எங்கேயும் தொலைக்கவும் இல்லை. அந்த கவர் அங்கேயேதான் உன் டேபிள் மேலேயே கிடந்துது’ன்னு சொல்லு. மனசு கஷ்டப்பட்டுட்டு இருக்கப் போறான். சீக்கிரம் போ!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுக்கச் சென்றுவிட்டார். ஜே.பி. என் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவே இல்லை. கீழே இறங்கி வந்தார்கள் சித்திரையும் ஜே.பி-யும். “என்ன சித்திரை, நான் வந்து கேட்டப்போ நீங்களும்தானே பதறினீங்க? அப்போ தெரியலையா இது டேபிள் மேல இருந்தது?” என்று கேட்டார் ஜே.பி. “உஸ்...” என்று அவரை அமர்த்தி, எல்லாப் படிகளையும் கடந்து கீழே அழைத்துப் போன பின்பு, சித்திரை ரகசியக் குரலில் சொல்லத் தொடங்கினார்... “ரவி சார் அந்த கவரை எடுத்துக்கிட்டுப் போனதை நானே பார்த்தேன். அப்புறம் தொலைச்சுட்டு ரெண்டு மணிக்கொரு தடவை, மூணு மணிக்கொரு தடவை இங்கே வந்தாரு. என்ன சார்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு போயிட்டாரு. நீங்க வரவரைக்கும் அந்த கவர் தொலைஞ்சுதான் போயிருந்தது. நீங்க படியேறிப் போனப்புறம், ஒரு பையன் வந்தான். இந்த கவரைக் கொடுத்தான். கவர் மேல பெரிசா ‘சாவி’ன்னு எழுதியிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்னான். அவனுக்குப் பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காலையில அவன் வேலைக்குப் போற வழியில இது விழுந்து கிடந்ததாம். அதான், முக்கியமானதா இருக்கும்னு கொடுத்துப் போகலாம்னு வந்தேன்னான்.  உடனே எடுத்துக்கிட்டு மேலே ஓடியாந்தேன். ரவி சார் தொலைச்சு, அதை ஒருத்தன் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்தான்னு சொன்னா, ஐயா ரவி சாரை கோவிச்சுக்குவாருன்னுதான் டேபிள் மேல கிடந்ததா சொல்லிக் கொடுத்தேன். இதை அப்படியே நீங்களும் மறந்துடுங்க!” மறுநாள் அலுவலகம் போனதும், சித்திரையின் கைகளைப் பற்றிக்கொண்டு, நெஞ்சு நெகிழ நன்றி சொன்னேன். ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்தேன். எவ்வளவோ வற்புறுத்தியும், “அட, என்ன சார் நீங்க” என்று வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர்! “கவரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போன அந்தப் பையனின் பெயர், அட்ரஸ் ஏதாவது வாங்கி வெச்சிருக்கீங்களா?” என்று சித்திரையைக் கேட்டேன். “ஓ...” என்று ஒரு சீட்டை எடுத்து வந்து கொடுத்தார். “அந்தத் தம்பியே எழுதிக் கொடுத்துது.” பார்த்தேன். ‘அரவிந்த் - அன்னை டிரேடர்ஸ்’ என்று கிறுக்கல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. வேறு தெளிவான முகவரி இல்லை. “இங்கேதான் எம்.எம்.டி.ஏ. காலனி உள்ள இறங்கி, திருமங்கலம்-கோடம்பாக்கம் ஹைவேஸ்ல ஏர்ற இடத்துக்கிட்ட அந்தக் கடை இருக்குதுன்னு சொல்லிச்சு அந்தத் தம்பி” என்றார். மாலை அலுவலகம் முடிந்து, அந்தப் பக்கமாகத்தான் மெதுவாக சைக்கிளைச் செலுத்திக்கொண்டு வந்தேன் - அந்த ஸ்வீட் பாக்ஸை அந்தத் தம்பியிடம் கொடுத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் உத்தேசத்தோடு! அன்னை டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு கடை என் கண்ணில் தென்பட்டது. அது ஒரு ஹார்டுவேர் ஸ்டோர்ஸ். அங்கே சென்று, "இங்கே அரவிந்த்னு ஒரு பையன் வேலை செய்யறானா?" என்று கேட்டேன். "என்னங்க, ஏதும் பிரச்னையா?" என்று கேட்டார் கடைக்காரர். "இல்லீங்க. சும்மா பார்க்கணும்" என்றேன். "அவன் நேத்தோட வேலையை விட்டு நின்னுட்டான். சொந்த ஊருக்கே போறேன்னு போயிட்டான்" என்றார். எங்கே போனான், அவன் சொந்த ஊர் எது போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.  நடந்த இந்தச் சம்பவம் இன்றுவரை என் மனைவிக்கு, என் தங்கை கணவர் ஜே.பி-க்கு மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். விசித்திரமான, சிக்கலான என் வேண்டுகோளை அன்னை நிறைவேற்றித் தந்த விதம், இதோ இப்போது பதிவிட்டுக்கொண்டு இருக்கும்போதும் என்னைச் சிலிர்க்க வைக்கிறது! அந்தப் பையனின் பெயர் அரவிந்த்; பணியாற்றும் இடம் ‘அன்னை டிரேடர்ஸ்’. இப்படியும்கூட யதேச்சையாக நிகழ முடியுமா என்ன?

8 comments:

அந்தப் பையனின் பெயர் அரவிந்த்; பணியாற்றும் இடம் ‘அன்னை டிரேடர்ஸ்’. இப்படியும்கூட யதேச்சையாக நிகழ முடியுமா என்ன?///

சிலிர்க்க வைத்து விட்டது.. அப்பாடா. இப்போதான் நிம்மதியாச்சு. நன்றி..



மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமல்ல..
நம்பிக்கை மறுப்பவருக்கும் நடந்தது


ஒரு பேட்டியில் சத்யராஜ் சொன்னது:

ஏதோ ஒரு படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு ( பிரேக் ) கிடைத்தால் ஏழுமலையானக்கு மொட்டை போடுவதாக வேண்டி கொண்டவர் அவர் மெல்ல மெல்ல நல்ல சான்ஸ்கள் வர அப்படியே விட்டு விட்டாராம். சில வருடம் ஒடிப்போயிற்று. சற்று பகுத்தறிவு நண்பர்கள் சேரவும் வேண்டுதலையும் மறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தெரிந்திருந்தும் ஏழுமலையானை கண்டுக்கவேயில்லை. கடைசியில் அவருக்கு பிரேக் கிடைத்த படம் நமக்கு எல்லாம் தெரிந்த “ நூறாவது நாள்” அதுவும் 6.2 மொட்டை தலை வில்லன் ... மறக்க முடியுமா..??

மொட்டை அடிக்க பல நாள் யோசித்து கடைசியில் இயக்குநர் மணிவண்ணனின் வற்புறுத்தலின் பேரில் ஒப்பு கொண்டாரம்.

இதில் என்ன ஆச்சரியம்..

பிறகு அவருக்கு தெரிந்ததுதான் ஆச்சரியம்... ????

திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் “ திருப்பதிசாமி பிக்சர்ஸ் “”

இது எப்படி இருக்கு...?????
 
வண்ணத்துப்பூச்சியாரே... நீர் யாரோ? பின்னோட்டத்தில் அற்புதமாக ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறீர்களே! Superb! இதுவரை நான் கேள்விப்படாத புதுச் செய்தி இது. ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்!
 
ரவி சார். நான் நல்ல சினிமாவின் ரசிகன்.. நேற்று முதல் ”உங்கள் ரசிகனின்” ரசிகன்

நன்றி சார்.
 
எனக்கும் அக்டோபர் 2008ல் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மனம் உருகி வேண்டும்போது அற்புதங்கள் நடப்பதை நானும் உணர்ந்த்திருக்கிறேன்.

சரி! ஒரு க்யூரியாசிடியில் கேட்கிறேன். நீங்கள் தொலைத்த கவர் கிடைத்திருக்காவிட்டால் அதன் விளைவுகள் - பத்திரிக்கைக்கு - என்ன விளைவுகள் ஆகியிருக்கும்?
 
என்னா ஆகியிருக்குமா? நினைக்கவே நெஞ்சு நடுங்குதேய்யா! நல்லாக் கெளப்புறீங்கய்யா பீதிய!
 
இப்பத்தான் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சே? பயப்படாம என்ன ஆயிருக்கும்னு வெலாவரி பண்ணுங்க.
 
நல்லதொரு அனுபவத்தைப் படிக்கத் தந்தமைக்கு முதற்கண் நன்றி. கடுகு சார் தன் எஸ்.ஏ.பி. பதிவில் தங்கள் பதிவுக்கான லிங்க் தந்திருந்ததால், இன்று தங்களின் பதிவைப் படிக்க நேர்ந்ததும் அன்னையின் அருள் என்றுதான் அடித்துச் சொல்லுவேன். ஏனெனில், இந்தப் பதிவைப் படிக்கும்முன் அலுவலகத் தோழி ஒருவர் தன் தம்பியின் கல்யாண பத்திரிகையை வைத்தார். அவர்கள் அன்னையின் தீவிர பக்தர்கள். அந்தப் பத்திரிகையே அன்னையின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றாகத்தான் அமைந்திருந்தது. அதன்பின்னரே தங்கள் பதிவைப் படித்தேன். கிட்டத்தட்ட தாங்கள் அனுபவித்த மனநிலையே இங்கும் தொடர்கிறது (சம்பளம் + இம்பிரின்ட்). உணர்வுகள் உறங்குவதில்லை.
 
உண்மையில் படிக்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் உங்கள் எழுத்தால் நானும் அன்னையை வணங்குகிறேன் .நல்ல விசயங்களை தொடர்ந்து எழுதுங்கள் .உங்கள் திருமணத்திற்கு நான் திருச்சியில் வந்திருக்கிறேன் நீங்கள் என்னை மறந்திருக்கலாம் .தொடந்து எழுதுங்கள் இது போன்ற அற்புதங்களை