உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, August 05, 2016

சாவி-100 (V)

சாவி சார் சொன்ன உவமான உதாரணங்களில், நேற்று பதிவு எழுதும்போது எனக்கு நினைவு வந்தவற்றைத் தொகுத்து எழுதினேன். பதிவு எழுதி முடித்த பின்னர், இன்னும் ஒன்று நினைவுக்கு வந்தது. 

அந்தக் காலத்தில், கதையோ, கட்டுரையோ... ஒரு படைப்பு விகடனில் பிரசுரமாகும்போது, அது எத்தனைப் பக்கம் வந்திருக்கிறது, ஒவ்வொரு காலமும் (column) எத்தனை நீளம் வந்திருக்கிறது என்பதை ஸ்கேல் கொண்டு அளந்து பார்த்து, அதற்கேற்பத்தான் சன்மானம் வழங்குவது வழக்கம். ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று விகடனில் பிரசுரம் ஆனபோது, அதே வழக்கப்படி சன்மானத்தைக் கணக்கிட, சாவி சார் குறுக்கிட்டு, அந்தக் கதைக்கு அதிக சன்மானம் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடம் வாதிட்டார். “அதெப்படி... ஒருவருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொரு நியாயமா? எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரி சன்மானம் கொடுப்பதுதானே சரி?” என்று ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்க, “அப்படியானால், உங்கள் அளவுகோல்படி ஒரு திருக்குறளுக்கு ஒண்ணரை அணாதான் தருவீர்களா?” என்று கேட்டார் சாவி.

சாவி சாரின் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அன்று முதல் ஒரு படைப்பை அளவுகோல் வைத்து அளந்து பார்த்துச் சன்மானம் கணக்கிடும் வழக்கத்தைக் கைவிட்டு, அதன் தரத்தை மட்டுமே பார்த்து சன்மானம் அளிக்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார் ஆசிரியர் பாலு. அவரின் மனதை மாற்றியது, சாவி சாரின் வாதம் மட்டுமல்ல; அவர் சொன்ன அற்புதமான உதாரணமும்தான்!

இனி, சாவி-100-ன் அடுத்த பத்து...

41) தாம் ஓர் எழுத்தாளர் என்று நினைவுகூரப்படுவதைவிட, ஒரு பத்திரிகையாளர் என்று நினைவுகூரப்படுவதைத்தான் ஆசிரியர் சாவி பெரிதும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

42) தாம் எழுதுவது மட்டுமல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த படைப்புகளைப் பெற்று வெளியிட்டு, அவர்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சாவி சாருக்கு அலாதி ஆனந்தம்.

43) கவியரசு கண்ணதாசனை ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுத வைத்ததும், கலைஞர் மு.கருணாநிதியை ‘குறளோவியம்’ எழுத வைத்ததும், கவிப்பேரரசு வைரமுத்துவை ‘கவிராஜன் கதை’ எழுத வைத்ததும் சாவிதான்! அதுமட்டுமல்ல; இந்தத் தலைப்புகள்கூட சாவி சார் தந்தவையே!

44) ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவருக்கு ‘புஷ்பாதங்கதுரை’ என்னும் கவர்ச்சிகரமான புனைபெயர் சூட்டி,  அவரைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் சாவிதான். ஜெயில் கைதிகளிடமும் ஹ்யூமன் ஸ்டோரி இருக்கும் என்று சொல்லி அவரை சிறைக் கைதிகளோடு உரையாட வைத்து, அவர்களின் கதைகளை ‘சிறைக் கதைகள்’ என்னும் தலைப்பில்  வெளியிட்டார் சாவி. சிவப்பு விளக்குப் பெண்களிடமும் உருக்கமான கதைகள் இருக்கும் என்று, அவர்களிடம் பேசச் செய்து, அந்தக் கதைகளை, ‘சிவப்பு விளக்குக் கதைகள்’ என்று வெளியிட்டார். அந்நாளில் வேறு எவருமே யோசிக்காத புதுமையான முயற்சிகள் இவை. மேலும், ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்று விசித்திரமான தலைப்பு கொடுத்து, புஷ்பாதங்கதுரையை தொடர்கதை எழுதச் சொன்னார் சாவி. இது பின்னர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

அதே புஷ்பாதங்கதுரையை மீண்டும் ஸ்ரீவேணுகோபாலன் அவதாரம் எடுக்கச் செய்து, ‘திருவரங்கன் உலா’ எழுதச் செய்தவரும், சத்யமே சாயி எழுதச் செய்தவரும்கூட சாவி சார்தான்!

45)  நாடக நடிகர் மற்றும் நாடக ஆசிரியராக மட்டுமே அதுவரை பரிச்சயமாகியிருந்த ‘சோ’விடம் உள்ள எழுத்தாற்றலைக் கண்டு, அவரை தாம் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுத வைத்து, எழுத்தாளர் ஆக்கியவர் சாவிதான். தினமணி கதிர் பத்திரிகையில் சோ எழுதிய ‘மை டியர் பிரம்மதேவா!’ என்னும் தலைப்பில் அமைந்த அரசியல் நையாண்டித் தொடர் கட்டுரைகள்தான், அவர் பின்னாளில் ஒரு முழுமையான அரசியல் பத்திரிகையை நடத்துவதற்கான அடித்தளமாக அமைந்தன என்று சொன்னால் மிகையில்லை.

46) பத்திரிகையாளர் சோ-வுக்கு பெருந்தலைவர் காமராஜின் மீது எத்தனை பெரிய அபிமானம் உள்ளதென்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரம்ப காலத்தில் சோ காமராஜ் மீது அப்படியொன்றும் அபிமானம் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பெருந்தலைவரின் பெருமையை உணர்த்தி, காமராஜ், சோ இருவரையும் தம் வீட்டுக்கு வரவழைத்து, சோவை காமராஜிடம் அறிமுகப்படுத்தி, பெருந்தலைவர் மீது சோவுக்கு மரியாதையும் பக்தியும் ஏற்படக் காரணமாக இருந்தவர் சாவிதான்.

47) தாம் தொடங்கிய ‘சாவி’ பத்திரிகையின் முதல் இதழிலேயே சுஜாதாவின் தொடர்கதை ஒன்றைத் தொடங்க விரும்பினார் சாவி. ஓர் எழுத்தாளரிடம் ஒரு தொடர்கதை கேட்டுப் பிரசுரிப்பது என்று முடிவு செய்துவிட்டால், உடனே ஒரு தலைப்பு சொல்லும்படி  கேட்பது சாவியின் வழக்கம். ஆனால், கதை இன்னதென்று எதுவும் நிச்சயிக்காத நிலையில் சுஜாதாவால் தலைப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. ‘நில்லுங்கள் ராஜாவே’ என்று சாவியே ஒரு தலைப்பு தர, அதற்கேற்ப உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார் சுஜாதா.

48) சாவி வைக்கும் தலைப்புகள் புதுமையாக இருக்கும். சாவியில் ‘ஆப்பிள் பசி’ என்றொரு தொடர்கதை எழுதினார் சாவி. இந்தத் தலைப்பு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை மிகவும் கவர்ந்துவிட, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்னும் தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் அவர்.

49) தலைப்பு பற்றிச் சொல்லும்போது, சாவி  ஆனந்த விகடனில் எழுதிய ‘விசிறி வாழை’ தொடர்கதைத் தலைப்பு குறித்தும் சொல்ல வேண்டும். “வயதான தொழிலதிபர் ஒருவருக்கும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்று விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சொல்ல, ஒப்புக்கொண்ட சாவி, ‘விசிறி வாழை’ என ஒரு தலைப்பையும் உடனே சொன்னார். வாஷிங்டனில் திருமணம் ஒரு நகைச்சுவைத் தொடர்கதை என்றால், ‘விசிறி வாழை’ சென்டிமென்ட் நிரம்பிய ஒரு சீரியஸ் தொடர்கதை. 

“கதையே இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் ‘விசிறி வாழை’ என உடனே எப்படித் தலைப்பிட்டீர்கள்?” என ஆசிரியர் பாலசுப்ரமணியன் வியப்புடன் கேட்க, “கதாநாயகியின் வாழ்க்கை யாருக்கும் உபயோகமில்லாமல் வீணாகப் போவதாகத்தான் இந்தக் கதை நீளும் சாத்தியம் இருக்கிறது. விசிறி வாழை பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அதனால் யாருக்கும் உபயோகம் இராது. எனவேதான், அதையே தலைப்பாக வைத்தேன்” என்றார் சாவி.

50) சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி. “நான் யாரையும் உருவாக்கவும் இல்லை; வளர்த்துவிடவும் இல்லை. அவரவர்களுக்குத் திற்மை இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் மேலுக்கு வந்தார்கள்” என்பார். அதையும்கூட  அருமையான ஓர் உதாரணத்தோடுதான் சொல்வார். “விளக்கு இருக்கிறது; அதில் போதுமான எண்ணெய் இருக்கிறது; திரியும் இருக்கிறது. சொல்லப்போனால் அது எரிந்துகொண்டும் இருக்கிறது. நான் கீழே கிடந்த ஒரு சின்ன குச்சியைக் கொண்டு திரியைத் தூண்டிவிட்டேன். அது பிரகாசமாக எரிவதாக உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அவ்வளவுதான்! விளக்கில் எண்ணெயும் இல்லாமல், திரியும் இல்லாமல் இருந்தால் தூண்டிவிட்டு என்ன பிரயோசனம்?” என்பார்.

(தொடரும்)










3 comments:

சாவி - சோ பற்றிய தகவல்கள் புதிது, சுவாரஸ்யம். தஞ்சாவூரில் எங்கள் தமிழ் வாத்தியார் செபஸ்தியான் எங்கள் தமிழ்த் தாள்களை ஸ்கேல் கொண்டு அளந்து மார்க் போடுவது நினைவுக்கு வருகிறது!!

நிர்வாண நகரம் கதையில் என்று நினைவு. ஏதோ ஒரு ஆபாச வர்ணனை ஒன்றை வெளியிடக் கூடாது என்று சாவி நிறுத்தி விட்டதாகப் படித்த நினைவு.
 
//'நில்லுங்கள் ராஜாவே’ என்று சாவியே ஒரு தலைப்பு தர, அதற்கேற்ப உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார் சுஜாதா.//


சாவியில் தொடர்ந்து நான் படித்து ரசித்த கதையில் இதுவும் ஒன்று!
 
ரசிச்சு படித்தேன். தினம் வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம். திகட்டாத நினைவுகள்.